தமிழகத்தில் அதிகரிக்கும் கவுரவக் கொலைகள் :7 பேர் உயிர் பறிப்பு
காதலித்த குற்றத்திற்காக, பாசத்துடன் வளர்த்த மகளை, "குடும்ப கவுரவம்' பாதிக்கும் எனக்கருதி, பெற்றோரே கொலை செய்வது தமிழகத்தில் தொடர் கதையாகி வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 7 பேரது உயிர்களை "கவுரவம்' என்ற பெயரில் பெற்றோர் பறித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலை கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராமன். இவரது மகள் ரஜினிலதா(14). அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை காதலித்ததாக சந்தேகப்பட்ட சீதாராமன், நேற்று முன் தினம் மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார்.
இதேபோன்ற சம்பவம் மதுரை எஸ்.எஸ்.காலனியிலும் ஆக.,24ல் நடந்தது. உறவினரை காதலித்ததற்காக மகள் மாரிச்செல்வியை(18) தந்தை ரங்கசாமி, கூலிப்படையுடன் சேர்ந்து விஷஊசி போட்டு கொலை செய்தார்.தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக "கவுரவ' கொலைகள் நடந்துள்ளன.
தர்மபுரி மாவட்டத்தில் வெற்றிவேல்(23) என்பவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த சுகன்யா(22) என்பவரை காதலித்ததற்காக, ஜூன் 23ல் கொலை செய்யப்பட்டார். சிவகங்கை கே.புதுக்குளத்தில் மகளை காதலித்த சிவக்குமார் என்பவரை தந்தையும், சகோதரரும் ஜூலை 7ல் கொலை செய்தனர்.
திருச்சியில் கார்த்திக் என்பவரை காதலித்த மகள் ஜெயாவை, ஆக.,7ல் கத்தியால் குத்தி தந்தை செல்வராஜ் கொலை செய்தார். இதேநாளில், நெல்லை மாவட்டத்தில் தெய்வராஜ் என்பவரை காதலித்த அருணாதேவி என்பவரை தந்தை வினை தீர்த்தான், "தீர்த்து' கட்டினார்.
கவுரவக்கொலைகள் குறித்து ஆய்வு செய்து வரும் மதுரை "எவிடென்ஸ்' அமைப்பின் நிர்வாக இயக்குனர் கதிர் கூறியதாவது :வடமாநிலங்களில் நடக்கும் கவுரவக் கொலைகள் குறித்து விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல் தமிழகத்தில் நடக்கும் கவுரவக் கொலைகள் குறித்தும் விளக்கம் கேட்க வேண்டும். இக்கொலைகள் தொடர்பாக சட்டம் இயற்றப்படும் என, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. காலம் தாழ்த்தாமல் உடனடியாக இச்சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, கவுரவக் கொலைகளை தடுக்க முடியும் என்றார்.
இவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல. சாதி வெறி மற்றும் பணம் அந்தஸ்து என்ற பேய் பிடித்த அரக்கர்கள்.. இதற்க்கு கொலைதான் முடிவு என்றால் அது மனித தன்மை அற்ற செயல். இதனை யாரும் மன்னிக்க கூடாது. இதற்க்கு ஒரு முடிவு உடனடியாக எடுக்கப்படவேண்டும்...