Monday, October 25, 2010

கல்வி குறித்து பெரியார்

பகுத்தறிவும், உடல் சக்தியும், உலக ஞானத் திறமையும், நல்ல பரம்பரையும், இயற்கை நற்குணமும் முக்கிய பரீட்சையாக இருக்க வேண்டும். அந்த பரீட்சையும், உத்தியோகம் கொடுக்கப்படும் காலத்தில் தான் பரீட்சிக்கப்பட வேண்டுமே ஒழிய, பள்ளிக் கூடத்தில் ஒவ்வொரு வருஷமும் பரீச்சை என்பது தேவையில்லாததாகும்.

எந்த உத்தியோகத்துக்கும் அதற்குத் தேவையான அளவுதான் தகுதி வைக்க வேண்டும்.

பள்ளிப்படிப்பில், ஒரு மாணவன் வகுப்பில், இத்தனை நாள் கிரமப்படி ஆஜராகி விஷயங்களைச் சரிவரக் கவனித்துக் கொண்டிருந்த காலம் தீர்ந்தால் போதும் என்று மேல் வகுப்புக்கு அனுப்பப்பட வேண்டும். பரீச்சை மூலம் மக்களைப் பள்ளியில் மேல் வகுப்புக்குச் செலவிடாமல் கழிக்கக்கூடாது, நிறுத்தக்கூடாது.

பொதுப் படிப்புக்கு ஆக ஒரு பையன் 15-வருடம் அதாவது வருடத்திற்கு ஒரு வகுப்புத் தேறினாலும் பி.ஏ. முடிக்க 15-வருடம் படிக்க வேண்டும் என்றால், இது மிகவும் அநீதியான காரியமாகும். ஏனெனில் ஆறாம் வயதில் பையன் படிக்கத் தொடங்கினால் பி.ஏ.க்கு 21-வருடம் ஆகிவிடுகிறது. அப்பறம் தொழில் படிப்புப் படிக்க 3, 4, 5-வருடங்கள் தேவைப்படுகிறது. பிறகு அவன் அதில் அனுபவம் பெற்றவனாவதற்கு 4, 5-வருடமாகும். இவற்றால் பையனின் நல்ல மூர்க்கதண்யமான ஆயுட்காலம் வீணாகப் போகிறதல்லாமல் பெற்றோர்களுக்கும் எவ்வளவு பணம், எவ்வளவு நாளைச் செலவிட வேண்டி இருக்கிறது. எத்தனை காலத்தை மாணவ வாழ்க்கையில் கழிப்பது? காலம், பணம் செலவழித்தவனுக்கெல்லாம் உத்தியோகம் கிடைக்கின்றதா?

18-வது வயதில் ஒரு பையனைக் கல்யாணம் செய்து கொள்ள அனுமதிக்கிறோம். சட்டமும் அனுமதிக்கிறது. அவன் படிப்பு முடிந்து வேலைக்குத் தயாராக மாத்திரம் 22-வயது 25-வயது ஆகவேண்டுமா? தொட்டில் ஒரு கையிலும், புத்தகம் ஒரு கையிலும் பிடித்துக் கொண்டும் மனைவியை ஒரு கண்ணில் பார்த்துக் கொண்டுமா படிப்பது? இளங் குழந்தைகளையும், மனைவியையும் கொஞ்ச நேரமெங்கே? இப்படிப்பட்ட இந்தப்படிப்புச் செல்வவான்களுக்கும், செல்வமில்லா விட்டாலும் படிக்க வசதியும், வாய்ப்பும் உள்ள பிறவியினால் பிறவிச் செல்வர்களான பார்ப்பனர்களுக்கும்தான். அதாவது மொத்த ஜனத்தொகையில் 100-க்கு 5, 6-பேர்களுக்குத்தான் ஏகபோக உரிமை உள்ளதாக இருக்கிறதே தவிர ஏழை மக்களுக்கும், புத்தி, சக்தி, திறமை, உலக ஞானம், நற்குணம், நற்செய்கை, நல்ல குண பரம்பரை உள்ள மக்களுக்கும் படிக்க வாய்ப்பில்லாமலே போய்விடுகிறது. ஆகவே, இது வருணாச்சிரம தர்ம முறைக்கேற்றபடி ஏற்படுத்தப்பட்ட படிப்பு முறையாகவே இருக்கிறது. வர்ணாசிரமம் கூடாது என்கின்ற போது வர்ணாசிரமப் படிப்பு முறையும் ஒழித்தாக வேண்டாமா?

ஆதலால் ஒரு அளவுக் கல்வி வரை பொதுக் கல்வியாக எல்லாச் சமுதாய மக்களும் படிக்கும் வயதை வந்த 100-க்கு 100-பேரும் படிக்கும்படியாகக் செய்து விட்டு, உத்தியோகத்திற்கும், தொழிலுக்கும் அவசியமான அளவு கல்வியை மாத்திரம் ஜாதி வகுப்புப் பிரிவு மக்கள் எண்ணிக்கைகள் படி கொடுத்து வரலாம். சர்க்கார் நடப்புக்கு அல்லாமல், அதற்கு வேண்டிய மக்கள் எண்ணிக்கைக்கு அல்லாமல் மேல் படிப்பு என்பதற்கு மக்கள் வரிப்பணத்தில் ஒரு காசும் செலவு செய்யாமல் இருக்க வேண்டும்.

கல்விக்குச் செலவு செய்யப்படும் காசு அவ்வளவும், மக்களை எழுதப்படிக்கக் கணக்குப் போடத் தெரியுமளவுக்கு மாத்திரம் செலவு செய்ய வேண்டும்.

ஆங்கிலம் தேவை இல்லை என்று ஆன பிறகு, தமிழ்நாட்டுக்குச் சமஸ்கிருதம் தேவை இல்லை, இந்தி தேவையில்லை என்று ஏன் செய்யக் கூடாது? அப்படி ஏற்பாடு செய்து விட்டால் படிப்பின் தொல்லை பெரும் அளவுக்கு நீங்கிவிடும். அதற்கு ஆகும் காலமும் செலவும் பெரும் அளவுக்கு நீக்கி விடும். கட்டடம், காலேஜ், ஆப்பரட்டஸ், ஆஸ்ட்டல் என்கின்ற பணம் பிடுங்கிப் பேயாட்டமும் வெகு தூரம் குறைந்து விடும், உருப்போடுவதே பரீட்சை யோக்கியதை யாவதும், 15-வருடம் படிப்புக்காகப் பாழாவதும் தானாகக் குறைந்து விடும்.

100-க்கு 75-உபாத்தியாயர்களைப் பெண் உபாத்தியாயர்களாகவே இருக்கச் இருக்கச் செய்யலாம். அல்லது கணவன் மனைவி இருவரையும் ஜோடி உபாத்தியாயர்களாக ஆக்கிச் செலவைச் சிக்கனமாக்கலாம். ஆண் உபாத்தியாயர் மனைவியைக் காப்பாற்ற வேண்டும். பெண் உபாத்தியாயர் புருஷனைக் காப்பாற்ற வேண்டும். அவர்கள் வாழ்க்கைக்கும் மாதம் 100, 200, 300, 500, 1000- வீதம் சம்பளம் தேவைப்படும். ஜோடி உபாத்தியாயர் ஆனால் செலவு சுருக்கலாம்.

ஓலைச் சாலைக் கொட்டகைகள் கல்வி கற்றுக் கொள்ளப் பாமர மக்களுக்குப் போதுமானதாகும்.



"நமது நாட்டில் கல்வி கற்ற மக்கள் எல்லோரையும் அறிவுடையவர்கள் என்று சொல்ல முடியவில்லை; கல்வி வேறு, அறிவு வேறாகவே இருக்கின்றன. கற்றவர்கள் பெரும்பாலும், மூடநம்பிக்கைக்கு உறைவிடமாக விளங்குகின்றனர்; புத்தகப் பூச்சிகளாக வாழ்கின்றனர். பகுத்தறிவுக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை; தானே ஒரு காரியத்தைப்பற்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் ஆற்றல் இல்லை; மனித சமூக ஒற்றுமைக்கு எதிராகவுள்ளவைகளில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். சாதிப்பற்று, சமயப்பற்று, சடங்குகளில் நம்பிக்கை, புராணங்களில் நம்பிக்கை ஆகியவைகள் கற்றவர்களிடம் மலிந்திருக்கின்றன. அவர்கள் சமூகச் சீர்திருத்தவாதிகளின் இயக்கங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறவர்களாகவே இருக்கின்றனர்."

No comments:

Post a Comment